Sunday, April 15, 2012

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே... [Amma Inaikku School-la]


“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..
அம்மாவுக்கு சமையல் வேலை,
அப்பா பேப்பரில் பிசி,
அக்காவுக்கு நாவல் சுவாரசியம்
கடைசியில்
டெலிபோன் வந்தபோது.. .
ஸ்கூலில் என்னதான் நடந்தது ?
குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.
முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தை மாயா புடவையை லேசாக இழுத்தாள்.  அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை.
“அம்மா.. ”
“அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..”
“போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..”
“இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“பூனைமேலே ஆனை வந்திருக்கும்.  அதெல்லாம் கேட்க இப்போது எனக்கு நேரமில்லே. .. போ.”
“அம். .. மா டீச்சர்கூட.”
“உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய் ஹேhம் ஒர்க்கை கவனி.”
“அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..”
“போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்க நேரமில்லே…”
“அம். .மா.”
“இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.”
தயங்கியபடி மாயா வெளியேறினாள். புனிதா சமையலில் ஆழ்ந்தாள். சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணி எட்டாகிவிடும்.  அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும் ஃபைலைப் பார்க்க வேண்டும்.
அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார். காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரை வேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தார்.  அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?
மாயா மெல்ல அவரை நெருங்கினாள். அவர் பேப்பரிலிருந்து முகத்தை எடுக்க விரும்பவில்லை.
“அப்பா..  இன்னைக்கு ஸ்கூல்லே.”
“பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே… ”
“இல்லேப்பா..  இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .”
“டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.”
“அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“நோ. . நோ. .. உங் கதை யெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.”
“கதையில்லேப்பா.”
“சரி..  சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.”
மாயா அக்காவை தேடி நகர்ந்தாள்.  அவள் ஙநடுக்காட்டு மாளிகைஙயில் ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் போதுதான், பாவம்; மாயாவும் உள்ளே வந்தாள்.
“மாலாக்கா. .. மாலாக்கா. .. ” மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள்.  புத்தகம் கீழே விழுந்ததில் மாலா காளியானாள்.  ”சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத் தட்டிவிட்டுட்டியே. ..”
“இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..”
“போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.”
“கொஞ்சம் கேளக்கா.. .”
“எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு. ”
அடித்து துரத்தாத தோஷம் தான் மாலா ’நடுக்காட்டு மாளிகைக்குள்’ ஆழ்ந்துவிட்டாள்.
புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
“மாலா” அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .
“மாலா! மாயா எங்கே ?”
“நான் பார்க்கலையே… என்னவோ சொல்ல வந்தாள்…” மாலா இழுத்தாள்.
“என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.”
“அப்பா..  அப்பா. . மாயா எங்கே ?” மாலாதான் கேட்டாள்.  பேப்பரும் கையுமாக வந்தார் “அங்கே தானேவந்தாள். ..”
“மாயா.. .”
“மா.. யா…”
குரல்கள் வலுத்தன.  பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.
வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர்.  சட்டென்று டெலிபோன் அலறியது.  ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.
“ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.”
“நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..”
“என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா.  எங்ககிட்டே சொல்லச் சொன்னாங்களா.. .? டாக்டர் கிட்டே அவசரமா கூட்டிப் போகச் சொன்னாங்களா ? தேங்க்யூ..  உடனே டாக்டர் கிட்டே போறோம்.”
டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார்.  அவர் மனைவி முகத்தில் கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை.  தேடல் தொடர்ந்தது.
வாசல் வராந்தாமூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா. ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா.  முகம் சிவந்திருந்தது.  உடல் அனல் பறந்தது.
உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .
“ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?”
மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.
“மாயா. . மாயா..  பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு ?”
மாலா அலறினாள்.  மாயா பேசவில்லை.
டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களை எந்திரத்தனமாய் சுழற்றியது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார் டாக்டர்.  பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.
“நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்கு ஆபத்துதான்.”
“கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள். நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..”
“கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?”
டாக்டர் அவர்களை உரிமையுடன். கடிந்துக் கொண்டார். அவர்கள் மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.
மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று.

உத்தரவிடு பணிகிறேன் :: ஆல்பர்ட்டோ மொராவியா [Uthiravidu Panikiren - Albert Moraviya]]

நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது எனக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். முதலில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எல்லாவிதமான உத்தரவுகளையும் பெறுவதற்கே நான் பழக்கப்பட்டிருந்தேன். மணியடிப்புகள், இண்டிகேட்டரில் பச்சை சிவப்பு சிக்னல்கள் காட்டுதல், வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்கள், எவருக்காவது செய்தி சொல்லச் செல்லல் இன்னபிற. திடீரென்று ஒன்றுமில்லாமல் போய்விட்டது. கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு வரவேற்பறை சோஃபாவில் அமர்வதைத் தவிர.

ஆனால் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட விரும்பவில்லை. செய்வதற்கு இனி ஒன்றுமில்லாமல் இருந்தது நான் வேலையில்லாமல் இருந்ததனால் அல்ல. யாரும் எனக்கு எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்காததால்தான். ஒருகால் சிலர் இந்த வித்தியாசத்தைப் பார்க்காமலிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த அளவில் வித்தியாசமிருந்தது. மிகப்பெரிய அளவில்.

விளக்கிவிடுகிறேன். வேலை தேடிச்சலித்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் காலை படுக்கையில் படுத்துக் கொண்டு, இன்னும் தூங்குவதாக என்னை நானே ஏமாற்றிக்கொள்ள முயன்று கொண்டிருந்தபோது, என் மனவியின் குரல் என்னை குதித்து எழ வைத்தது. குரல் கோபமன தொனியில் சொல்லிக் கொண்டு இருந்தது : “ இந்த நேரத்தில் என்னதான் இந்த உலகத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள் படுக்கையிலங்கே? உங்களுக்கே வெட்கமா இல்லை? நான் உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எழுந்து முகம் கழுவிவிட்டு குறைந்த பட்சம் பயனுள்ளவராக ஆக்கிக்கொள்ளுங்கள். காலை உணவைத் தயார் செய்யுங்கள் ”.

மேலோட்டமாக அவ்வார்த்தைகள் சாதாரணமானவை. முக்கியத்துவமற்றவை. ஆனால் போர்வைகளுக்குள் சுருண்டு கிடந்த என்மீது அவை முழுவதும் வித்தியாசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தின. நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். எழுந்திரு, உடைமாற்று, உன்னைப் பயனுள்ளவனாக ஆக்கிக்கொள். காலை உணவு தயார் செய். இவைகள் உத்தரவுகள். நிஜமானவை. வங்கியில் நான் பெற்றுக்கொண்டிருந்தவைகளைப் போலவே இவைகளும் தெளிவானவை. முடிவானவை. அதிகாரமிக்கவை. இவைகள் உத்தரவுகள். இவைகளினால் தூண்டப்பட்டது போல ஏதோவொன்று என் மனதிலிருந்து கால்கள்

வழியாக பயணித்தது. உடனே நான் போர்வைகளை எறிந்தேன். தரையில் பாதங்களை வைத்தேன். பாத்ரூமுக்குச் சென்றேன். கதவைத் திறந்தேன். ஷவரைத் திறந்தேன். சுருங்கச் சொன்னால், சொல்லப்பட்டதையெல்லாம் செய்தேன்.

பின் என்னை நானே உசுப்பிக்கொண்டேன். எளிமையாகத் தோன்றிய இந்த உத்தரவுகளில் மேலும் பல உத்தரவுகள் உட்குறிப்பாக இருந்ததை உணர்ந்தேன். அதாவது இரண்டாம் மூன்றாம் தரமான உத்தரவுகள். உதாரணமாக இந்த சிறிய வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். ‘காலை உணவைத் தயார் செய்’. இந்த வாக்கியம் சொன்னது : முதலில் சமயலறைக்குப் போ. இரண்டாவது, காஸ் குக்கரை ஏற்று. மூன்றாவது, காப்பியையும் நீரையும் பாத்திரத்துள் ஊற்று. நாலாவது, ப்ரெட்டை வெட்டு. ஐந்தாவது, க்ரில்லை அடுப்பில் வை. ஆறாவது, சீனி, எண்ணெய் பாத்திரங்களோடு தட்டை தயார் செய். ஏழாவது, காப்பி பானையையும் ட்டோஸ்ட்டையும் தட்டுக்கு மாற்று. எட்டாவது, படுக்கையறைக்கு தட்டைக்கொண்டுபோய் படுக்கையில் வை.

கொடுத்த கணத்திலேயே நான் என் மனைவியின் உத்தரவைச் செயல்படுத்தா விட்டால், பல்வேறு இழைகள் பின்னிப் பிணைந்த அதன் தன்மையினால், ஒன்றன்பின் ஒன்றாக பல செயல்களைச் செய்வது கடினமாகிவிடும். அதோடு, நான் ஏற்கனவே சொல்லியபடி, இந்த இரண்டாம் தரமான உத்தரவுகள் சில மூன்றாம் தரமானவைகளை உள்ளடக்கியவை. உதாரணமாக, தட்டில் வெண்ணெயை வைப்பதென்றால், ஃப்ரிஜ்ஜிலிருந்து வெண்ணெயை எடுப்பது, அதைச் சுற்றியுள்ள தாளிலிருந்து அதை விடுவிப்பது, கத்தி கொண்டு அதை வெட்டுவது, வெட்டிய துண்டுகளை உணவில் வைப்பது இன்னபிறவும். இதெல்லாம் சொல்வது என்ன? வங்கியிலிருந்து என்னை மூட்டைகட்டி அனுப்பிய சில இயக்கமற்ற நாட்களுக்குப் பின் இயங்குகின்ற ஒரு இருப்பைக் கண்டுகொண்டேன் என்ற பிரக்ஞையை நான் மெல்ல அடைந்துகொண்டிருந்தேன் என்பதை. அப்போது நான் ஒரு ஃப்ங்ஷனரியாக இருந்தேன். இப்போது மறுபடியும் ஆகிக்கொண்டு வருகிறேன். காரணம் – வார்த்தை விளையாட்டை மன்னியுங்கள் – நான் மறுபடியும் ஃப்ங்ஷன் பண்ண ஆரம்பித்தேன்.

என் மனைவி ஒரு ஷார்ட் ஹேண்ட் டைப்பிஸ்ட். தினமும் அலுவலகம் செல்வாள். அன்று காலை அவள் எனக்கு எந்த உத்தரவும் தரவில்லை. அவள் செய்ததெல்லாம் என்னை நோக்கிக் கத்திவிட்டு ஓட்டமாகச் சென்றதுதான். “ தொலைபேசியைக் கவனித்துக் கொள்ளுங்கள். பெயர்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.” அது எனக்குப் போதுமானதாய் இருந்தது.

வரவேற்பறையில் அமர்ந்தேன். சோஃபாவில் காத்திருந்தேன். எதற்காக? தொலைபேசி மணி ஒலிப்பதற்காக. அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு நன்றிகள். இரண்டு மணி நேர இயக்கமின்மையில் இருபது அல்லது நாற்பது அல்லது அறுபது வினாடிகள் இருப்பை, அதாவது இயக்கத்தை கொடுத்தன அவை. என்னுடைய கருத்தில் இதுவே பெரிய விஷயம். அதோடு தொலைபேசி அழைப்புகள் ஒன்றுக்கு மேலிருந்தால், எனது இருப்பிற்கு ஒரு தொடர்ந்த, முறைப்படுத்தப்பட்ட குணம் கிடைத்துவிடும். இவைகளைப் பற்றி நான் யோசித்தேன். நிமிர்ந்தபோது எனக்கு எதிரில், ஜன்னலோரம் இருந்த மேஜைமேல் டைப்ரைட்டர் இருந்தது. மிஞ்சிய அலுவலக வேலை ஏதாவது இருந்தால் முடிப்பதற்கு என் மனைவி அதைப் பயன்படுத்துவாள். முக்கியமான வார்த்தைகளைக் கொண்டிருந்தும், அந்த சமயம் சப்தமின்றி, இயக்கமின்றி இருந்த அதைப் பார்த்தபோது எனக்குள் ஒரு சகோதர உணர்வு ஏற்படுவதை நான் உணர்ந்தேன். நானும் அதைப்போலவே என் மனைவி இல்லாதபோது இயக்கமற்றும் இருக்கும்போது இயங்கிக்கொண்டும் இருந்தேன்.

நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். நாம் இருவரும் சகோதர சகோதரியைப் போல.ஒரு வகையில் அந்த இயந்திரம் என்னைவிட மனிதத்தனம் மிகுந்ததாக இருந்தது. ஏனென்றால் அதற்காவது துடிப்பான, திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற குரலிருந்தது. நான் அனேகமாக எப்போதுமே மெளனியாகவே இருந்தேன்.

அன்று தொலைபேசி மணி ஒலிப்பு மட்டும்தான் இருந்தது. ஆனால் எந்த நேரமும் ஒருவன் உத்தரவுகள் பெறலாம் என்பதை நடைமுறையில் நான் கண்டேன். கவனம் செலுத்தினால் போதும். வாசல் மணி ஒலித்தது. எழுந்திருக்கவும். சென்று கதவைத் திறக்கவும். யார் வந்தாரென்று பார்க்கவும். இங்கே ஒரு உத்தரவிருந்தது. தெருவோரம் இரண்டு பெண்கள் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். எழுந்து சென்று ஜன்னல் வழியாக என்ன நடக்கிறதென்று பார்க்க இங்கே ஒரு உத்தரவிருந்தது. சமையலறையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழாயை அடக்க இது ஒரு உத்தரவு. இப்படியாக. இப்படியாக.

உண்மையில் நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயைத் திருகி மூடுவதுதான் ஒருவனின் ஒரே வேலை என்றால் ஒருவன் வாழ முடியாது. இன்னும் முக்கியமானது தேவைப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி விட்டுத் தொடர்கிற, அடிக்கடி நிகழ்கிற காரியமாயிருக்க வேண்டும். உதாரணமாக சொட்டிக் கொண்டிருக்கும் நூறு தண்ணீர் பம்ப்புகளை பத்து நிமிஷத்துக்கொருதரம் ஒவ்வொன்றையும் திருகி மூடவேண்டும். இருந்தாலும் என் மனைவி வரும்வரை ஆடாமல் அசையாமல் அமைதியாய் உட்கார்ந்திருக்கும் டைப்ரைட்டரைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. ஏதோ கொஞ்சம்.

அன்றிலிருந்து என் வங்கி மேனேஜரின் இடத்தை தான் பிடித்துவிட்டதுபோல என் மனைவியிடமிருந்து உத்தரவுகள் சுருக்கமாகவும், விரைவாகவும் மொத்தமாகவும் வர ஆரம்பித்தன. “ நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர். எப்போதும் நேரத்தை வெட்டித்தனமாக வீணடிப்பவர். சுய நலம். ஏதாவது உபயோகமாய் இருங்கள். சுத்தப்படுத்துங்கள். துணிகளைத் துவையுங்கள். சட்டைகளைப் பெட்டி போடுங்கள். மார்க்கட்டுக்குச் செல்லுங்கள். ஏதாவது சமையல் செய்யுங்கள்.” இப்படியாக.

தினசரி உதவுவதையும் நிறுத்திவிட்டாள். நான் வேலை இல்லாமல் வீட்டுக்கு ஏதேனும் பணம் கொண்டுவர முடியாதவனாக இருப்பதால் என்னைத் தண்டிக்க அவள் நினைக்கிறாள் என்பதாக யாரும் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு இன்பம் கொடுத்துக்கொண்டிருந்தாள் என்பதை அவள் உணரவில்லை.

என்ன சொன்னேன்? இன்பம்? அதாவது அவள் என்னை இயங்க, அதாவது இருக்க வைத்துக்கொண்டிருந்தாள். காலைகளில் அவள் எனக்குப் பிறப்பித்த உத்தரவுகளை நான் அவள் வெளியே செல்லுமுன் எழுதி வைத்தேன். பின் நாள் முழுவதும் அவைகளைப் பூரணமாக, யந்திர மயமாகச் செய்து முடித்தேன். செய்வதற்கு எந்த உத்தரவுகளுமற்ற நேரங்களில் நான் மேன்மேலும் என் இயக்கத்திற்கு அவளையே சார்ந்துள்ளேன் என்பது பிரக்ஞையில் தட்டியது. அவள், அவள் மட்டுமே, என் கைகளை, கால்களை, விரல்களை இயக்க முடியும். இதன் பின், நன்றியுணர்ச்சி, நம்பிக்கை கலந்த ஒரு தீவிரமான அன்புணர்ச்சியை நான் அனுபவித்தேன்.

இதைப்போல நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்தோம். பின்பு, பல அடையாளங்களைக் கொண்டு, குறையற்றதாகவும் இயக்கமுடையதாகவும் தோன்றிய இந்த உறவு மெல்ல அழிந்துகொண்டு வருவதை நான் உணரத்தலைப்பட்டேன். ஏற்கனவே சொன்ன உவமானத்தைத் திரும்பச் சொல்வதானால், இது ஒரு டைப்பிஸ்ட்டுக்கும் டைப்ரைட்டருக்கும் இடையேயான உறவாயிற்று. போகப்போக, டைப்ரைட்டரில் எஞ்சும் காகிதம் போன்ற மிச்சங்களை எடுத்து சுத்தம்செய்ய வருபவனுக்கும் அதற்கும் உள்ள உறவாயிற்று.

ஒருகால் இப்படி உத்தரவுகள் தந்து என்னைத் தொல்லைப்படுத்துவதன் மூலம் என்னைத் தண்டிப்பதற்குப் பதிலாக எனக்கு ஒரு இருப்பை ஏற்படுத்த உதவுவதை அவள் உணர்ந்திருக்கலாம். ஒருகால், என்னைவிடச் சிறப்பாக அவள் உத்தரவுகளைச் செயல்படுத்தும் ஒருவனை அவள் கண்டிருக்கலாம். எப்படியோ. வெளியில் செல்லுமுன் நான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்னவென்று சொல்வதை அவள் மறக்க ஆரம்பித்தாள் என்பதே உண்மை. எனவே மறுபடியும் என்ன நிகழ ஆரம்பித்ததென்றால், நான் அடிக்கடி வரவேற்பறை சோஃபாவில் கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு, முதுகில் சாவியும் நெஞ்சில் ஸ்பிரிங்கும் கொண்ட உண்மையான பொம்மையைப் போல இயக்கமின்றியிருக்க ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு வெறுக்கத்தக்க அவசரத்தால் உந்தப்பட்டதுபோல என் மனைவி இருந்தாள். என்னோடு பேசாமலே ஆடை மாற்றினாள். அவளுக்கு மட்டும் காஃபி போட்டுக்கொண்டாள். ‘போய்விட்டு வருகிறேன்’கூடச் சொல்லாமல் அவசரமாக வெளிச்செல்லலானாள். சமயங்களில் பகல் பூராவும். சமயங்களில் இரவும்கூட வராமலிருந்தாள்.

இதற்கிடையில் எந்த தொலைபேசி அழைப்பும் கிடையாது. யாரும் வாசல் மணியை அழுத்தவில்லை. அவள் சொல்லாததால் நான் சந்தேகத்திலேயே எதையும் சுத்தப்படுத்தாமல் இருந்தேன். சாப்பிடுவதைப் பொறுத்தவரை அடிக்கடி நிகழாத, வரையறுக்கப் படாத, என் வயிற்றின் தூண்டுதல்களுக்கு நான் அடிபணிந்தேன். நான் பெற்ற ஒரே உத்தரவுகள் வயிற்றின் அழைப்புகள்தான். டப்பாவில் அடைக்கப்பட்டதை வைத்து நான் இதை சரிக்கட்டினேன்.

இப்படியாக எங்கள் வீடு நாளுக்கு நாள் அசிரத்தைக்கும் இருளுக்குமான இடமாகிப் போனது. தேய்க்கப்படாத தரை, கண்டபடி கிடக்கும் ஃபர்னிச்சர், சமையலறையில் அழுக்குப் பீங்கான்கள், க்ளாசுகள், மூலைகளில் வேஸ்ட் பேப்பர் துண்டுகள், நாற்காலிகளின் மீது துணிகள், சரிசெய்யப்படாத படுக்கைகள்என. என் மனைவிக்கு வெளிப்படையாகவே இவையெல்லாம் தெரிந்தன.

ஆனால் அவள் இதைப்பற்றியெல்லாம் சிரத்தை கொள்ளவில்லை என்று யாரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு அவள் எனக்கு ஒரு உத்தரவு தர – ஒரு வேளை – நினைத்திருக்கலாம். ஆனால் அது என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஞாயிறுகளில் ஒரு இரண்டு மணி நேரம் அவள் வீட்டிலிருந்தாள். மிகவும் சுருக்கமான முறையில் எங்கள்வீட்டின் இரண்டு அறைகளையும் அப்போது சுத்தப்படுத்துவாள்.

ஒரு நாள் காலை நான் விழித்தபோது ஏற்கனவே வெளியே செல்வதற்குத் தயாராக உடைமாற்றியிருந்த அவள், படுக்கையின் மீதிருந்த ஒரு பெட்டியை அமைதியாய் தயார் செய்துகொண்டிருந்தாள். சொருவுகளுக்கும் பெட்டிக்குமாய் அவள் சென்று வந்துகொண்டிருந்ததை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவில் இந்த வருதலையும் போதலையும் ஒரு உத்தரவாக, ஒரு கசப்பான, வேதனை தருகின்ற, என்ன நடக்கிறதென்று அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவாக அர்த்தப்படுத்தினேன். எனக்குள் ஏதோ வெடித்தது. வார்த்தைகளை என் இதழ்கள் உச்சரித்தன.

“ என்ன செய்கிறாய் நீ? ”

திரும்பி என்னைப் பார்த்தாள். பின் படுக்கையில் வந்து அமர்ந்துகொண்டு சொன்னாள்.

“ டூலியோ, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் உங்களுக்குப் புரியவைக்க எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுத்தேன். எனவே சொல்லி ஆகவேண்டி நிர்ப்பந்திக்கப் படுகிறேன். நம் திருமண வாழ்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. என்னை நேசிக்கின்ற, நானும் நேசிக்கின்ற, ஒரு மனிதனை நான் கண்டுவிட்டேன். சொல்லப் போனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அவரோடுதான் வாழ்ந்து வருகிறேன்.

“ என்னுடைய இருப்பு இனி இங்கே தொடர முடியாது. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் சில கந்தல் துணிகளையும் இந்த டைப்ரைட்டரையும் தவிர எனதென்று இங்கு எதுவுமில்லை. எப்போதும் போலவே நீங்கள் இப்போதும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். யாரோடு வாழப்போகிறேனோ அவர் கீழே வீதியில் எனக்காக காரில் காத்திருகிறார். எனக்காக தயவு செய்து இந்த டைப்ரைட்டரை எடுத்துக் கீழே சென்று காரில் வையுங்கள். அவ்வளவுதான் நான் கேட்பது. ”

பயங்கரமானதொரு வலியை, வேதனையை நான் உணர்ந்தேன். அதன் தீவிரத் தன்மையினாலேயே, தவிர்க்கமுடியாதபடி ஒரு உத்தரவாக மாற்றப்பட வேண்டிய வேதனை. நான் சொன்னேன் :

“ ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது ”

அதுதான் உண்மையாக இருந்தது. அவளிடமிருந்து உத்தரவுகள் வராமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் என் வார்த்தைகளை அவள் பாணியில் அவள் புரிந்து கொண்டாள்.

“ துரதிருஷ்டவசமாக, நீங்கள் இல்லாமல் என்னால் நன்றாகவே வாழ முடியும் ”. அவள் பதிலளித்தாள். “ நீங்கள் உங்களை பயனுள்ளவராக ஆக்கிக்கொள்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் போதாது. நீங்கள் அவசியமானவராகவும் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் தேவையில்லை. அழுக்கு உறிஞ்சும் யந்திரத்தையோ மின்சாரத்தில் துவைக்கும் யந்திரத்தையோ அல்லது தொலைபேசிக்கு தானாக பதிலளிக்கும் யந்திரத்தையோ உங்களுக்குப் பதிலாக நான் வைத்துக்கொள்ளலாம்.”

என்ன வேதனை ! இட்ட உத்தரவிற்கு அடிபணிந்து கொண்டிருந்த நான் சொன்னேன் : “ உன்னை நான் போக விட மாட்டேன். ”

அவள் உறுதியாகச் சொன்னாள் : “ குழந்தை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். உடை மாற்றிக்கொள்ளுங்கள். டைப்ரைட்டரை எடுத்துக்கொண்டு போய் காரில் வையுங்கள். பெட்டியை நானே எடுத்து வருகிறேன். ”

நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததிலிருந்து முதல் முறையாக என் முன் முரண்பட்ட இரண்டு உத்தரவுகள். ஒரு பக்கம் என் வேதனை அவளைப் போகவிடாதே என உத்தரவிட்டது. மறுபக்கம் டைப்ரைட்டரைக் கீழே கொண்டுபோகச் சொல்லி அவளே உத்தரவிடுகிறாள். எதைச் செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் அவள் உத்தரவிட்டபடி உடை மாற்றிக்கொண்டேன். என் மனைவி வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தாள். பின் பெட்டியை மூடினாள். கண்ணாடி முன் சென்றாள். என் பக்கம் முதுகு காட்டி.

என்னுள் உணர்வு செயல்பட்டது. ‘ நீ என்னைவிட்டு போக முடியாது ‘ என்று சொல்லிக்கொண்டே அவள்மீது பாய்ந்தேன்.

அவள் கழுத்தைப் பிடித்தேன். எல்லாமே சுருக்கமாகவும் எளிதாகவும் தன்னிச்சையாகவும் நடந்தேறியது. திடீரென்று நொண்டியானதுபோல் என்னையே தள்ளுமளவுக்கு அவள் உடல் கீழே சரிய ஆரம்பித்ததை உணர்ந்ததும் நான் அவளை இழுத்து வந்து படுக்கையின் குறுக்கே கைகளை நீட்டி மல்லாக்க கிடத்தினேன்.

அடுத்த உத்தரவை நிறைவேற்ற நேரமாகிவிட்டிருந்தது. டைப்ரைட்டரை அதன் உறைக்குள்ளிட்டேன். ஃப்ளாட்டைவிட்டு கீழே க்ரெளண்ட் ஃப்ளோருக்கு லிஃப்டில் சென்றேன். கீழே காரிருந்தது. வாசல் கதவுக்கு எதிரில். கண்ணாடி மின்னியதால் நான் ட்ரைவரைப் பார்க்க முடியவில்லை. காரைச்சுற்றி வந்து ‘டிக்கி’யைத் திறந்து டைப்ரைட்டரை உள்ளே வைத்தேன். பின் மறுபடியும் மேலே ஃப்ளாட்டுக்கு சென்றேன்.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்தேன். கால்களை மடக்கி. கைகளைக் கட்டிக்கொண்டு. சூனியத்தை வெறித்துக்கொண்டு. உத்தரவுகளுக்காக காத்துக்கொண்டு.

அந்நிய துக்கம்

ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ்ஸில் ஒரு வீரனைப் போலப் பாய்வான்.

” கல்லே..கல்லே.. வேர்க்கல்லே. ”

” உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி! ” – சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க்கடலை வாங்கமாட்டார்கள். பாலிதீன் பைகளில் அடைத்த சின்ன சின்ன வேர்க்கடலைப் பாக்கெட்டுகள். சின்தடிக் சர்ட் ஜேபியில் நூறு ரூபாய் நோட்டுகள் கண்ணாடி போலத் தெரிகின்றன. ஐம்பது பைசாவுக்கு என்னமாய் யோசிக்கிறார்கள்.

அந்த லெவல் க்ராசிங்கிற்கு அப்பாலிருக்கும் சேரிதான் அழகுவின் சாக்கடைகளும், சகதிகளும் நிரம்பிய அன்னை பூமி. அவன் பெயருக்கும் உருவத்துக்கும் மயிரிழை சம்பந்தமுமில்லை. நாலாங்கிளாஸ் வரை பள்ளிக்கூட வாசனை. ஸ்கூலில் தமிழ் வாத்தியார் மட்டும்தான் அவனை அழுத்தந்திருத்தமாய் உச்சரிப்பார். மற்றவர்கள் எல்லாருமே, “அளகு…அளகு…” சமயத்தில், “அலகு”.

போன வாரம் அவன் அப்பா வாயில் நுரை தள்ளி செத்துப் போனார். அழகுக்கு அதில் சொற்பமும் துக்கமில்லை. அவர் என்ன வேலை பார்த்தார் என்று இன்றைய தேதி வரை அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை அநேக நேரங்களில் கள்ளச் சாராய போதையுடன் வாய் குழறுபவர். பல சமயம் மொக்கைக் காயங்களுடனும், சில சமயம் ரத்தக் காயங்களுடனும் வீடு திரும்புபவர். நள்ளிரவில் அம்மாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி உலுக்குபவர். அவளை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்து துவம்சம் செய்பவர். பின்னிரவுகளில் அவர் அம்மாவிடம் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும் பேசுகிற மாதிரி குரல் கேட்கும். கனவு என்று நினைத்து தூக்கத்தில் கரைந்து போவான் அழகு.

அம்மா கறுப்பாயிருந்தாலும் அவனுடைய மிகச் சின்ன வயதுகளில் விக்கிரகம் மாதிரி அழகாய் இருந்ததாய் ஞாபகம். இப்போது நோஞ்சான் விக்கிரகம். இருமல் சத்தம் அப்பாவிடமிருந்து தொற்றிய குடும்ப கீதம். அடிவயிற்றை எக்கிக் கொண்டு கிளம்பும் அதே பாணி இருமல் குளிர் காற்றடித்தால் அழகுக்கும் வரும்.

அம்மாதான் பாதி கிளாஸ் நடக்கையில் ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிப்போனாள். “இனிமே இஸ்கூல் வேணாம் அளகு..”

ஏன் எதற்கு என்று கேட்கவில்லை அவனுக்கு விடுதலை சந்தோஷம். அண்ணாச்சி கடையில் கொண்டு போய் விட்டாள்.

” அண்ணாச்சி… (இருமல்) எனக்கும் இப்பல்லாம் ஆவறதில்லை. இவங்கப்பன் வெவகாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே. ஒரு செல்லாக்காசு சம்பாதிச்சுப்போடத் துப்பில்லாத ஆளு. இனிமே அளகு கொண்டாந்தாத்தான் அடுப்புல பொங்கிப்போட முடியும். ”

அண்ணாச்சி இரண்டு நாள் அவனைக் கடையில் வைத்திருந்தார். அன்பாக, பொறுமையாக, தெளிவாக, நிதானமாக… கடைசியில் பொறுமை இழந்து ஒரு குட்டுக்குட்டி சொல்லிக் கொடுத்தும் அழகுக்குப் பொட்டலம் கட்டும் கலை சுலபத்தில் கை வரவில்லை.

” சும்மா வெச்சு காசு தரமுடியுமா? கூட்டிட்டுப் போயிரம்மா. இங்க இவனுக்கு வேலையில்லை.”

” அண்ணாச்சி… அண்ணாச்சி ” அழுது அரற்றினாள் அம்மா. என்ன இது இழவாகப்போயிற்று என்று யோசித்த அண்ணாச்சிக்கு நிர்ப்பந்தத்தில் அந்த யோசனை பிறந்தது. தட்டைக்கூடையை எடுத்து அழகுவின் கையில் கொடுத்தார். பாட்டிலின் தகரமூடியை சுழற்றிக் கழற்றி கடலைப் பாக்கெட்டுகளைத் தட்டைக் கூடையில் கொட்டிப் பரப்பினார்.

” ரயில்வே கேட்டுக்குப் போ. ஒரு பாக்கெட் வித்தீன்னா உனக்குப் பத்துக்காசு.”

கட்டிப்போட்ட மாதிரி கடைக்குள் கிடப்பதை விட அழகுக்கு இது பிடித்தது.

தட்டைக்கூடையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஈச்சனாரி ரயில்வே கேட்டுக்கு ஓடினான். கோவை-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கொரு தரமாவது அந்த வழியாகச்செல்லும். முணுக்கென்றால் கேட்டை சாத்திவிடுவார்கள். கேட் சாத்தினால் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் சில லாரிகள், பத்துப் பதினைந்து பஸ்களாவது தேங்கிப்போகும்.

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

அழகுவின் சத்தம் கேட்டால் சில குழந்தைகள் அடம் பண்ணி வாங்கும். பெரும்பாலான வெள்ளுடுப்பு ஆசாமிகள் இவனைப் பார்ப்பதே பாவம் என்கிற மாதிரி விறைப்பாய் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். பஸ்ஸில் வரும் கிராமத்து ஜனங்கள் தான் கல்மிஷமில்லாமல் பேசி அவனிடம் கடலைப் பாக்கெட்டுகள் வாங்குவார்கள்.

சில சிடுமூஞ்சிக் கண்டக்டர்கள் அவன் படிக்கட்டில் காலை வைத்தாலே நாயை விரட்டுகிற மாதிரி விரட்டித்தள்ளுவார்கள். வேறு சில கண்டக்டர்கள் தயவான்கள் போல் அவனை பஸ்சுக்குள் அனுமதித்து விட்டு, இறங்கிப் போகையில் ஒரு வேர்க்கடலைப் பாக்கெட்டை முழுசாய் லவட்டிக்கொள்வார்கள். ஐந்து பாக்கெட்டுகள் விற்றால் அழகுக்குக் கிடைக்கக் கூடிய ஐம்பது பைசா அநியாயமாய்ப் பறிபோகும்.

” அண்ணே… அண்ணே… ” என்று கண்டக்டரிடம் கெஞ்சுவான். குழைவான்.

” பஸ்சுக்குள்ளே எவ்வளவு பாக்கெட் விக்கறே…? ஒண்ணு தந்தா கொறஞ்சா போய்டுவே? அப்றம் நாளைலேர்ந்து இந்த கேட்ல ஒரு பஸ்ல காலை வைக்க முடியாது ஜாக்ரதை. அங்க பாரு எஸ்ஸார்ட்டி வந்து நிக்குது. ஓடு.”

அந்த நிமிஷம்தான் காத்திருப்பு வரிசையில் கோத்துக்கொண்ட அந்த பஸ்சுக்கு ஓடுவான். தினமும் அடித்துப்பிடித்து எழுபத்தைந்திலிருந்து நூறு பாக்கெட்டுகள் வரை விற்று விடுவான்.

அதற்கப்புறம் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடுகளுக்குப் போவதை அம்மா நிறுத்திவிட்டாள். அந்த எலும்பை உருக்கும் இருமலால் நிறுத்தப்பட்டு விட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளால் உடம்புக்கு முடியவில்லை என்பது ஒருபுறம். எச்சில் தெறிக்க அவள் இருமுவதை மற்றவர்கள் அசூசையாய்ப் பார்த்தார்கள் என்பது இன்னோர்புறம்.

அழகுவின் வியாபார நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. அன்றைக்கு கேட் சாத்தி பஸ் ஒன்று வந்து நின்றதும் -

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

பஸ்சுக்கு அந்தப்பக்கம் அசரீரி மாதிரி புதிய குரல். அழகு திடுக்கிட்டு பஸ்ஸை சுற்றிக்கொண்டு அந்தப்பக்கம் போய்ப் பார்த்தான். அவனை மாதிரியே இன்னொரு பொடியன், அவனிடம் ஐம்பது காசு கொடுத்து ஜன்னல் வழியாக ஒருவர் வேர்க்கடலைப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

அழகுக்குள் ஆத்திரப்புயல். தன்னுடைய காசை இன்னொருவன் தட்டிப் பறிக்கிற உணர்வு. அவன் தோளைத் தொட்டுத் திருப்பினான்.

” யார்ரா நீ ? ”

” ராக்கப்பன். ”

” இங்க எதுக்கு கடலை விக்கறே ? ”

” வித்தா உனக்கென்ன? ”

” நாந்தான் மொதமொதல்லே இங்கே வந்தது. ஒரு மாசமா விக்கறேன் தெரியுமா ? ”

” செட்டியார் கேட்டாண்ட போய் என்னைக் கடலை விக்கச்சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” டேய்… மரியாதையா வேற எங்கயாச்சும் போய்டு. ”

” போவலைன்னா? ”

” கை வெச்சா கன்னம் பிஞ்சுரும். ”

” இந்த மிரட்டலெல்லாம் இளிச்சவாயன் எவன்கிட்டயாச்சும் வெச்சுக்க. என்கிட்ட வாணாம். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” தம்பி, இங்க ஒரு பாக்கெட் குடு. ”

ராக்கப்பன் வே. க. பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அழகு உட்சபட்ச கோபத்தைத் தொட்டான். அந்தப் பாக்கெட்டைத் தட்டி விட்டான். ராக்கப்பன் அழகுவின் கூடையைத் தள்ளினான். பாக்கெட்டுகள் சிதறின. அழகு அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுப்பி, அவன் இவன் கன்னத்தில் அறைந்து, காலை இடறி, இருவரும் தரையில் புரண்டு, புழுதியில் குளித்து…

ரயில் இரைச்சலுடன் கடந்து, கேட் திறந்தது. பஸ்கள் ஒவ்வொன்றாய்க் கரைந்தன. ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை.

அதற்கப்புறம் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் அழகு விற்பது. அந்தப் பக்கம் ராக்கப்பன். நிலைமை சரியானது. விரோதம் கலைந்து ஸ்நேகம் தழைத்தது. ராக்கப்பனை ராக்கு என்று செல்லமாய்க் கூப்பிட்டான் அழகு. கேட் திறந்திருக்கும் சமயங்களில் மர நிழலில் உட்கார்ந்து இருவரும் ரஜினி படம் பற்றி அரட்டை அடிப்பார்கள்.

அம்மாவின் உடம்பு சற்று மோசமாயிற்று. இருமல் சூரணம் வாங்க ஒன்றோ, இரண்டோ பணம் பத்தலை என்றால் சில சமயம் ராக்கு இரக்கப்பட்டுக் கைமாற்றுத் தருவான்.

இந்தக் கூட்டணி விற்பனைக்கும் விரைவில் இடிவிழுந்தது. புற்றீசல் மாதிரி மேலும் சில வேர்ர்க்கடலை விற்கும் பையன்கள் அங்கே தோன்றினார்கள். அங்கு கேட் சாத்தும் போது வியாபாரம் ஆவது புரிந்து சுந்தராபுரத்துக் கடைக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கொரு அன்றாடங்காய்ச்சிப் பையனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஜனங்களுக்கு ஒரு பழக்கம். செடி சத்தையை அகற்றி, முள் புதர்களை விலக்கிப் போடும் வரை வேடிக்கை பார்ப்பார்கள். பாதை கிடைத்து விட்டால் மந்தை மந்தையாய்ப் புகுந்து பாதை போட்டவனையே மிதித்துக் கொண்டு முன்னால் போவார்கள்.

அதற்கப்புறம் கேட்டுக்கு இங்குமங்கும் பஸ்கள் வந்து நின்றால் -

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

ஏகப்பட்ட குரல்கள்.

ஒரு பாக்கெட் விற்பது கூட ஜாக்பாட் விழும் மாதிரி, லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி ஆகிப் போனது. அதற்கும் எத்தனை சர்க்கஸ்கள், மாரத்தான்கள்.

அண்ணாச்சி பாக்கெட்டுக்குப் பதினைந்து பைசா என்று கமிஷனை உயர்த்திய பின்னும் அழகு திணறினான். ஒரு நாளைக்கெல்லாம் நாற்பது பாக்கெட் விற்றால் அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.! ஒரு பஸ் வந்து நின்றால் எல்லோரும் பறந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். கடலை வாங்கும் ஆசாமிக்கு எந்த மூஞ்சி பிடிக்கிறதோ அவனுக்கு ஒரு பாக்கெட் விற்கும். ஐம்பது பைசாவுக்கு என்னமாய் அடிதடி!

அஞ்சுக்கும் பத்துக்கும் போராட்ட நாட்கள் நகர்ந்தன.

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், “கல்லே…கல்லே…” என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

“அளகு, ஏன் ஒரு மாதிரி இருக்கே? வெறி பிடிச்சமாதிரி அலையறே ? ”

” இன்னிக்கு ஒண்ணல்ல ரெண்டல்ல… நூத்தம்பது பாக்கெட்டை நா வித்தாகணும் ராக்கு! ”

” விளையாடறியா? அம்பது வித்தா அதிசயம். தட்டைக் கூடையைத் தூக்கிக்கிட்டு பத்துப் பேராச்சும் சுத்தறோம். வாங்கறவனை விட விக்கறவன் அதிகமா இருப்பான் போலிருக்கு. யாரைக் குத்தஞ் சொல்றது! எல்லாரும் வயத்துப் பசிக்காகப் பறக்கறாங்க. ”

அழகுவின் கண்ணில் கண்ணீர் சுரந்து மின்னியது.

” நா இன்னிக்கு வயத்துப் பசிக்காக விக்கலை ராக்கு. அம்மா இருமல் முத்திப் போய் தர்மாஸ்பத்திரில கிடக்கறாங்க. மருந்து வாங்கணும். ஊசி மருந்து இருவத்தஞ்சு ரூபா. ஆஸ்பத்திரில ஸ்டாக்கு இல்லியாம். அதைப்போட்டாத்தான் அம்மா பிழைக்கும்.”

கேட் சாத்தினார்கள்.

ஒரு பஸ் கேட் அருகே வந்து ஓய பாய்ந்தான் அழகு. ” தம்பி, சாயந்திரத்துக்குள்ள ஊசி மருந்து வாங்கிட்டு வா. ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

அந்த பஸ்சில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. வேகமாய் ஒரு ரவுண்ட் அடித்தான். ” அம்மா அழாதம்மா. அண்ணாச்சி கிட்ட ஒரு கூடை நிறைய பாக்கெட் போடச் சொல்லியிருக்கேன். அத்தனையும் வித்துப்புட்டு சாயந்திரம் மருந்தோட வரேன். ” மன்னார்சாமி குறுக்கே வந்து இரண்டு போணியைக்கெடுத்தான்.

ரயில்வே கேட்டுக்கு அந்தப்பக்கம் ஜனமூட்டையை அடைத்துக் கொண்டு இன்னொரு பஸ் விர்ரென வந்து நின்றது.. இன்று ஒரு பஸ்சை விடக்கூடாது.

பஸ்சுக்கு நாலு பாக்கெட். ” சிஸ்டர், ஏழாம் நம்பர் பெட் சனியன் எப்ப இருமலை நிறுத்தும் ? ” சில பையன்கள் அந்த பஸ்சை நோக்கி ஓடினார்கள். முந்து அழகு. விற்பனைக்கு முந்து அழகு. ஊசி மருந்து !

அழகு சுதாரித்து ரயில்கேட்டின் சுழலும் விக்கட் நுழைவில் புகுந்தான்.

மனசு ஆஸ்பத்ரியிலும், உடல் பஸ்சை நோக்கியும் நிலைத்தன. வேறு சிந்தனை இன்றி அந்த பஸ்சையே குறி வைத்து தண்டவாளத்துக்குக் குறுக்கே படுவேகமாய் ஓடினான்.

தட் !

ஒரு துரதிர்ஷ்ட விநாடி அழகுவின் காலை தண்டவாளத்தில் இடறிவிட்டது.

” அம்மா…ஆ…”

தண்டவாளத்தின் நடுவே கடலைப்பாக்கெட்டுகள் சிதற குப்புற விழுந்தான் அழகு.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் குறுக்கே பாய்கிறானே இந்த அழகு ! விரைந்து வரும் ரயிலைப் பார்த்து ராக்குவின் கண்கள் பயத்தில் விரிந்தன.

” அளகு… அளகு… ” – கத்தினான் ராக்கு.

என்ஜின் டிரைவர் விழுந்து கிடக்கும் அழகுவைப் பார்த்து விட்டார். பிரேக்கைப் பிரயோகித்தார். உடனே நிற்குமா அந்த ராட்சத வாகனம். எழ முயலும் அழகுவை ஆவேசமாய் சக்கரங்கள் விழுங்கின. சிவப்புத் தெறிக்க அவனை அரைத்து, அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துக் கொண்டு போய் நின்றது நீளமான அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

ரத்தத் துகள்களாய்க் கிடக்கும் அழகுவைச் சுற்றி, நிமிஷத்தில் கும்பல் கூடியது. ராக்கு சதைத்துணுக்குகளைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்.

ஏறக்குறைய அதே விநாடி -

ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்களில் குரல்கள்.

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே. ”

” என்னாச்சு தம்பி? ஏன் ரயில் நின்னுருச்சு? ”

” ஆக்ஸிடெண்ட்டு. ஒரு பையன் ரயில்ல அடிபட்டு செத்துட்டான். கல்லே…கல்லே… வேர்க்கல்லே. “